Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 2


தலையனையை நனைக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
போதும் என்பது போல காய்ந்திருந்தது.

எவர் எது பேசினாலும்
இறுகி நிற்கும் இதயம்
தனித்து இருக்கும் போது
புயலில் சிக்கிய வள்ளம் போல் தள்ளாடும்

பெரு மூச்சுகள் தொடரும்
அலை போல கண்ணீர் வழிந்தோடும்

நேரில் பார்ப்போருக்கு
அது புரியாது

மூன்று தினங்கள்
முறையான உறக்கம் இல்லை.
ஒரே ஒரு உடைதான் அந்த மூன்று நாளும் உடுத்தது

முகத்தை கழுவியதோடு சரி
தினசரி மாற்றிய உடை பழக்கம்
பல் துலக்கி விட்டு தூங்கும் மன ஒழுக்கம்
எல்லாமே தலை கீழாகி இருந்தது

மாலையில் யோகாசன வகுப்புக்கு சென்று வந்து
ஒரு கப் பால் அருந்தி விட்டு
சற்று நேரம் அமைதியாக தியானத்தில் ஈடுபடுகிறேன்.
நாள் முழுவதும் உள்ள களைப்பு தீருவது போன்ற ஒரு உணர்வு
இருப்பினும் மனது சலனமாக இருக்கிறது

ஒரு போதும் இல்லாத பதட்டம்
இரவின் மடியில் வீழ்கிறேன்.

திடீரென
அறைக் கதவு தட்டப்படும் ஓசை
எழுந்து கதவருகே வருகிறேன்
பலர் நிற்பது வெளியிலிருந்து வரும் ஒளியில் தெரிகிறது.

யாரது?

"போலீஸ் ,கதவைத் திற"
கடுமை
குரலில் தெரிகிறது.

கதவைத் திறந்ததும்
உள்ளே புகுந்த போலீசார் என்னை மடக்கி கட்டிலில் அழுத்துகிறார்கள்.

நான் முரண்டு பிடிக்காமல்
அவர்களுக்கு இடமளிக்கிறேன்.

ஆம்
எதிர்ப்பது முட்டாள்தனம்.

போலீசார்
அறை முழுவதும் எதையோ தேடுகிறார்கள்.

ஒன்றுமில்லை என்கிறார்கள்.

சற்று என்னை தளர்த்தி விட்டு
கட்டிலில் அமரச் சொல்கிறார் இன்ஸ்பெக்டராக தெரிபவர்.

உட்காருங்கள் என்கிறேன்.

"உன் அறையில் குண்டுகள் இருக்கிறது என தகவல்.
எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?"

நான் மெதுவாக சிரிக்கிறேன்.

இருந்தால் எடுங்கள் என்கிறேன்.

ஒரு போலீஸ்காரர்
என் அறைச் சுவரை அலங்கரிக்கும்
என் காதலியின் புகைப்படத்தை உற்று நோக்குகிறார்.

யார் இவர்?

என் காதலி...............

அவர் கன்னடத்தில் இன்ஸ்பெக்டரிடம்
இவரும் : இவரது அம்மாவும்தான் புகார் கொடுத்தவர்கள் என்கிறார்.

எனக்கு அது புரிகிறது.
பேசாமல் கேட்கிறேன்.
மனது கனக்கிறது.......................

இதற்கு என்ன சாட்சி.............. சார்ஜன் சீனிவாசன் கேட்கிறார்.

என்னை விடுங்கள்.
சில படங்களை காட்டுகிறேன் என்கிறேன்.

என் போட்டோ அல்பத்தை எடுத்துக் கொடுக்கிறேன்.

அல்பத்தை
பார்த்த சார்ஜன் சீனிவாசனின் கண்கள் கோபத்தால் சிவக்கிறது.

இதையும் எடுத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு போகலாம் வாங்க என்கிறார்.

கன்னடத்தில் ஏதேதோ பேசுகிறார்கள்.

வேகமான பேச்சு அரை குறையாக புரிகிறது.


வந்த போது இருந்த வேகம் இப்போது அவர்களிடம் இல்லை
சற்று தணிந்திருந்தது.

இப்படியே வரட்டுமா?

இல்லை.
உடுத்துக் கொண்டு வாங்க.

உடைகளை மாற்றிக் கொண்டு
அவர்களோடு நடக்கிறேன்.

வெளியே நிற்கும் ஜீப்பில் என்னை ஏறச் சொல்கிறார்கள்.

அது நகர்கிறது.......................

No comments: